27/3/2026—Day 10

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
592
-2,583
93
வணக்கம் டியர்ஸ்,

ரொம்ப நாள் ஓடிப் போச்சு நான் பயணங்கள அப்டேட் செஞ்சு! எனக்கே எங்க போனோம், என்ன செஞ்சோம்னு மறந்து போச்சு. நினைவடுக்குகள தூசி தட்டி, ஞாபகம் வந்தத எழுதறேன்.

பத்தாவது நாள், ரொம்பக் காலைலயே எழுந்துட்டோம். அன்னைக்குப் ஜெய்சல்மீர் போகனும். ஆனாலும் பிக்கானேர்ல பாக்காத இடங்கள் இன்னும் பல இருந்தது. அதுல ஒன்னு ஸ்ரீ லஷ்மிநாத் டெம்பிள். அங்க டெம்போ போகாதுன்னு ட்ரைவர் சொல்லிட்டாரு நைட்டே. சோ நாங்க ஹோட்டல்ல சொல்லி ஆட்டோ அரேஞ் பண்ணிட்டோம். பசியாறிட்டு ஆட்டோல கிளம்பிட்டோம் கோயில் பார்க்க! ஆட்டோ ரைட் தூக்கிப் போடுது! ரோடு குண்டும் குழியுமா இருக்கு. ஒரு வழியா கோயிலுக்கு வந்தாச்சு.

அந்த வளாகத்துல நிறைய புறாக்கள். கீச்கீச்னு சத்தம். காலையிலயே நல்லா இருந்தது கேட்க. பிறகு கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டோம். அங்க சிலைகள்லாம் நம்ம கோயில் சிலைகள் போல இல்ல! வெள்ளைக் கல்லுல செஞ்சிருக்காங்க! துளசி குடுத்தாங்க கும்பிட்டதும். அங்க கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டு, அது பக்கத்துலயே இன்னொரு கோயில் இருந்தது. பேர் ஞாபகம் வரல. நடக்கற தூரம்தான். அதையும் பார்த்துட்டு வந்தோம். காத்திருந்த ஆட்டோல ஏறி ஹோட்டல் திரும்பிட்டோம். அப்புறம் மூட்டை முடிச்சைக் கட்டி டெம்போ ஏறிட்டோம்.

பிக்கானேர்ல இன்னொரு ஃபேமஷான கோயில் கருணி மாதா கோயில். பழைய விக்ரம் படத்துல வருமே எலி கோயில், அதுதான் இது. இந்த தேவிதான் பிக்கானேர் அரசருக்கு ஆசி வழங்கனாங்கனு கைட் சொல்லி இருந்தாரு. அதை பார்க்காம போனா எப்படி? ட்ரைவர்ட்ட கொஞ்சம் காசு எக்ஸ்ட்ரா குடுக்கறோம்னு சொல்லி, அங்கே போனோம். அன்றைக்கு செம்ம கூட்டம். தேவிம்மாவுக்கு உகந்த நாள் போல. வரிசை நின்னுதான் உள்ள போனோம். அந்தக் கோயில்ல நிறைய எலிகள் இருக்கும். எலிய தெய்வீகமா பார்க்கறாங்க அந்த மக்கள். கோயில் உள்ள வெள்ளெலி பார்த்துட்டா அது நம்ம அதிர்ஷ்டமாம். பாப்பாத்தான் ஒரு வெள்ள எலிய காட்டுனா. தலைக்கு மேல நெட் போட்டிருக்காங்க! அது மேல ஓடிச்சு இருந்துச்சு ஒன்னு. எங்க எல்லோருக்கும் ஒரே சந்தோஷம் பார்த்துட்டோம்னு. பிறகு உள்ள போய் மாதாவ பார்த்துட்டு, சீக்கிரமா அடிச்சுப் புடிச்சு வெளிய ஓடி வந்துட்டோம். எலி காலுக்கு அடில அங்கயும் இங்கயும் ஓடுது. அதோட ஸ்மேல் வேற தாங்கவே முடியல. கடவுள்டான்னு மனசு சொன்னாலும், உடம்பு ஒத்துக்கல. கோயில விட்டு வெளிய வந்ததும்தான் நல்லா மூச்சே இழுத்து விட முடிஞ்சது.

அங்க நெறய கடை வரிசை இருந்தது. ராஜாஸ்த்தான் வளையல்கள், சாமிப் படங்கள், கழுத்துக்கு, காதுக்குன்னு அவ்ளோ பொருட்கள். கொஞ்சம் ஷாப்பிங் பண்ணோம் ட்ரைவர் வாங்க போலாம்னு கெஞ்சற வரைக்கும்.

பிறகென்ன!!! டெம்போ போகுது, போகுது போய்ட்டே இருக்கு. பார்க்கிற இடமெல்லாம் மணல், மணல், மணல்தான். குளிர்ச்சியா ஒன்னுமே இல்ல. சாப்பிடற கடைகளும் சரியா அமையல. ரொம்ப லேட்டாத்தான் ஒரு தாபால நிறுத்தனாரு ட்ரைவர். அது பார்க்கவே ரொம்ப சுமாரா இருந்தது. கிடைச்சத சாப்பிட்டோம். சாப்பாடு நல்லாத்தான் இருந்தது. ஒரு வழியா சாயங்காலம் ஆறுக்கு மேல ஜெய்சல்மீர் வந்து சேர்ந்தோம். வந்த உடனே எங்கள ஒரு ஜீப்புக்கு மாத்தி விட்டுட்டாங்க சன்செட் பார்க்க.

அந்த ஜீப் பாலைவனத்துல பறக்குது! ரோலர் கோஸ்ட்டர் ரைட் போகிற மாதிரி, மேலயும், கீழயும் ஏறி இறங்கி ஹார்ட்ட எகிறி குதிக்க வச்சிடுச்சு! எவ்ளோ அடக்கியும் வாய் விட்டுக் கத்திட்டேன் நானு! யப்பா டேய்! ஆனா அந்த ரைட் வொர்த்துதான். அவ்ளோ அழகா இருந்தது சன்செட். பாலைவனத்து நடுவுல கொண்டு வந்து ஜீப்ப நிறுத்தனாங்க. அங்கத்தான் எல்லோரும் போட்டோ எடுக்கறது, வியூ பாய்ண்ட் பார்க்கறதுன்னு நின்னிட்டு இருக்காங்க. நாங்களும் ஜெய்சல்மீர்னு எழுதி இருந்த இடத்துல போட்டோ எடுத்தோம். மணல்ல ஏறி நடந்தோம். நான் மணல்ல பாப்பா பேர் எழுதி ஹார்ட் போட்டேன். அங்க டீ ஸ்டால் கூட இருக்குன்னா பார்த்துக்கங்களேன். பாலைவனத்துல ஒரு கப் டீ! நல்லாத்தான் இருந்தது. சுமார் ஏழு மணி போல, ஹோட்டல்ல கொண்டு போய் விட்டாங்க. அது ஒரு கேம்ப்சைட். கூடாரம் அடிச்சது போல கொஞ்சம் பெரிய காட்டேஜ். அழகா இருந்தது. கொஞ்சம் ரிப்ரெஷ் ஆனதும் பக்கத்து ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போனாங்க! அங்கத்தான் டின்னர். ஆனா டின்னருக்கு முன்ன, டான்ஸ் ஷோ இருந்தது. சினிமால்ல பார்ப்பமே, நடுவுல பெண்கள் ஆட, உருளைத் தலகாணில படுத்துட்டே ஆண்கள் சுத்தி உக்காந்து பார்ப்பாங்களே அந்த செட்டப். நானும் அந்தத் தலையணைல சாஞ்சுப் படுத்து அந்த ஃபீல அனுபவிச்சேன். நடுவுல டீ குடுத்தாங்க! குடிச்சிட்டே பாரம்பரிய உடைல அவங்க டான்ஸ் ஆடறத பார்த்தோம். அந்த லேடி எங்க கிட்ட வந்தாங்க. டான்ஸ் ஆட கூப்பிட்டாங்க என்னை! கால் வலியாவது ஒன்னாவதுன்னு நான் எழுந்து போய் ஒரு ஆட்டம் போட்டுட்டு வந்தேன்! அவ்வ்வ்வ்! ஜெய்சல்மீர்ல ஒரு ஜிகுஜிகா டான்ஸ்! ஆடிட்டு வந்து உக்காந்ததும், ரெண்டுக் காலுலயும் பாராங்கல்ல தூக்கி வச்ச மாதிரி வலி. ஆடிய ஆட்டமென்ன பாட்டுத்தான் மைண்ட்ல!!!!

அப்புறம் மெல்ல நடந்து டின்னர் குடுக்கற இடத்துக்குப் போனோம். அங்கத்தான் ஒரிஜினல் ராஜாஸ்த்தான் சாப்பாட்ட பார்த்தேன். கருணைக் கிழங்குல ஒரு டிஷ். பீஸ், உருளைக்கிழங்குலாம் போட்டு ஒரு டிஷ். அப்புறம் இனிப்பு மாதிரி ப்ரவுன் கலர்ல ஒன்னு இருந்தது. என்ன டேஸ்ட் அதுன்னே தெரில. இனிக்கல, புளிக்கல, துவர்க்கல, மண்ணு மாதிரி இருந்தது. எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பார்த்துட்டேன். அப்புறம் ரூமுக்குக் கிளம்பிட்டோம். அங்க நடக்கறப்ப மணல்ல என்னோட, ரெண்டு நிழல் தெரிஞ்சது! அதை ஒரு அதிசயம்னு போட்டோ எடுத்து வச்சேன். தட் நைட், ஆடிய பாதம் ஆள விடுடா சாமின்னு படுத்திருச்சு!!!

மறுநாள் காலையும் ஜெய்சல்மீர்தான். சீக்கிரம் அடுத்த அப்டேட் தர பார்க்கிறேன்.

அண்ட்டில் தென், பாய் டியர்ஸ்.
 

Author: VanishaAdmin
Article Title: 27/3/2026—Day 10
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.